ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? டெல்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரணை
புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள ப.சிதம்பரம் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்த உள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், கடந்த 5ம் தேதி மாலை திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவர் வரும் 19ம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதனிடையே ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விவகாரத்தில் ப.சிதம்பரம் தரப்பில் நேற்று ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த வழக்கை பொருத்தமட்டில் எனது பெயர் குற்றப்பத்திரிக்கையில் இல்லை. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டு உள்ளேன். அதனால் இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அதேபோல், தற்போது வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற காவலையும் ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே கோரிக்கை கொண்ட மனு, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறையில் ஆஜராகி விளக்கமளிக்க தயாராக உள்ளதாக ப.சிதம்பரம் தாமாக முன்வந்து தாக்கல் செய்த மனுவை சிபிஐ நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.