இறுதிச் சடங்கில் பங்கேற்காதது என் மனதில் நீங்காத வடு: ஜெட்லி குறித்து மோடி பேச்சு
புதுடெல்லி: ‘அருண்ஜெட்லியின் இறுதிச் சடங்கில் பங்கேற்காதது, என் மனதில் நீங்காத வடுவாக இருக்கும்’ என்று, பிரதமர் மோடி பேசினார்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த மாதம் உடல்நல குறைவால் காலமானார்.
இவருக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். எனினும் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தால், நேரில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தவில்லை.
அவர் நாடு திரும்பியதும், அருண் ஜெட்லியின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜ மூத்த தலைவர் அத்வானி, பாஜ செயல் தலைவர் ஜே. பி. நட்டா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடர் பிரார்த்தனை நிகழ்ச்சியில் பஜனைப்பாடல்கள் பாடப்பட்டன. பின்னர் அருண் ஜேட்லி படத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அப்போது பிரதமர் மோடி பேசுகையில், ‘‘நானும் ஜெட்லியும் நீண்ட கால நண்பர்கள். அவருக்கு நான் அஞ்சலி செலுத்தும் நாள் வரும் என்பதை நினைத்து கூட பார்த்ததில்லை.
அவருடைய மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாதது, என் மனதில் எப்போதும் நீங்காத வடுவாக இருக்கும்.
‘ எனத் தெரிவித்துள்ளார்.