கேரளாவில் தொடரும் கனமழை பலியானவர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு; மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரளாவில் தொடரும் கனமழை பலியானவர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு; மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழைக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து கடந்த 4 நாளில் பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

மாயமான 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பொது மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக திருச்சூர், வயநாடு, இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதன்படி 2வது நாளாக இன்று கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோழிக்கோடு அருகே பாலுசேரி பகுதியில் தேங்கி கிடந்த தண்ணீரில் விழுந்து கிருஷ்ணன்குட்டி (65) என்பவர் இறந்தார்.



இதேபோல் மலப்புரம் அருகே தானாளூர் பகுதியில் முஸ்தபா மகன் லதீப் (20) ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இறந்தார். கண்ணூர் மாவட்டம் பையனூர் பகுதியில் ரவி மகன் ரிதுல் (22) குளத்தில் மூழ்கி இறந்தார்.

இருட்டியில் ஜீப் ஆற்றில் கவிழ்ந்தது. இதில் லிதீஷ் என்பவர் அடித்து செல்லப்பட்டார்.

அவரை தேடும் பணி நடந்து வருகிறது. இதே போல் கடலில் மாயமான குமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த 2 மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

கண்ணூர், காசர்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகவே இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடலில் மீன்பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் இன்றும், கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் நாளையும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.



எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் இன்றும், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் நாளையும், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் 25ம் தேதியும், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் 26ம் தேதியும் மஞ்சள் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கன மழையை தொடர்ந்து கேரளா முழுவதும் 26 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதில் 1519 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் இடுக்கி மற்றும் முல்லைபெரியாறு அணைகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.

இடுக்கி அணையில் ஒரே நாளில் 3 அடி அதிகரித்து 2311. 38 அடியாக (கடல் மட்டத்தில் இருந்து) உயர்ந்துள்ளது.

முல்ைல பெரியாறு அணை நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்துள்ளது.

.

மூலக்கதை