ரயில்வே வாரிய தலைவர் தகவல் அடுத்த 10 நாட்களில் 2600 ஷ்ராமிக் ரயில்கள்
புதுடெல்லி: கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக ரயில்வே வாரிய தலைவர் விகே யாதவ் கூறியதாவது: கடந்த 23 நாட்களில் 2600 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. சுமார் 36 லட்சம் தொழிலாளர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மே ஒன்றாம் தேதி 4 ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், மே 20ம்தேதி ரயில்களின் எண்ணிக்கை 279ஆக அதிகரிக்கப்பட்டது.கடந்த 4 நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 260 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 3 லட்சம் தொழிலாளர்கள் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளனர். அடுத்த 10 நாட்களில் 2600 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். 36 புலம்பெயர் தொழிலாளர்கள் ஏற்றிச்செல்லப்படுவார்கள். மாநிலங்களுக்கு இடையேயும் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 முதல் 12லட்சம் பேர் சொந்த ஊர் செல்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.