உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,200 ஆக உயர்வு: இந்தியாவில் 12 ஆக உயர்வு; 650ஐ தாண்டியது
டெல்லி: உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 4,22,566-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 21, 200 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் 12 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 657ஐ தாண்டி உள்ளது. தமிழகத்திலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏப்ரல் 15-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்த 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 900 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பலரது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தடை உத்தரவை மீறி அத்தியாவசியமின்றி யாராவது வீட்டில் இருந்து வெளியே வந்து சாலைகளில் சுற்றித் திரிந்தால் அவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. அதேபோல தமிழக அரசும் பால், காய்கறி, உணவுப் பொருட்கள், மருத்துவம், தண்ணீர், ஊடகம் தவிர மற்ற முக்கியமில்லாத விஷயங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய கோவ்-இண்ட்-19 ஆய்வுக் குழு, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. அதில் நோய் தொற்றின் ஆரம்ப கட்டத்தில் அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா மிகச்சிறப்பாக செயல்பட்டு வைரசை கட்டுப்படுத்தி இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்தியாவில் உண்மையிலேயே வைரஸ் பாதித்தோரின் சரியான எண்ணிக்கை என்ற முக்கிய கூறு இல்லை என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ‘‘இந்தியாவில் பரிசோதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறைவு. பரவலான சோதனை இல்லாத நிலையில், சமூக பரிமாற்றத்தால் வைரஸ் பரவியவர்கள் எண்ணிக்கையை மதிப்பிடுவது முடியாத காரியம். மேலும், மருத்துவமனையை தாண்டி, மருத்துவ வசதிகளுக்கு அப்பாற்பட்டு, எந்த அறிகுறியும் இல்லாமல் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் எவ்வளவு பேர் என்பதையும் இதுவரை கண்டறியவில்லை’’ என கூறி உள்ள விஞ்ஞானிகள், ஆரம்பகட்ட பாதிப்புகளின் அடிப்படையிலேயே இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர்.