உ.பி பாஜக அரசின் 3 ஆண்டு பட்டியல்; பொய்யால் நிரம்பிய சாதனை அறிக்கை: பிரியங்கா காந்தி காட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உ.பி பாஜக அரசின் 3 ஆண்டு பட்டியல்; பொய்யால் நிரம்பிய சாதனை அறிக்கை: பிரியங்கா காந்தி காட்டம்

புதுடெல்லி: உத்தர பிரதேச பாஜக அரசின் மூன்றாண்டுகள் சாதனை அறிக்கை பொய்களால் நிரம்பியுள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தனது அரசின் மூன்றாண்டு சாதனை பட்டியல் விளக்க கூட்டத்தை நடத்தினார்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘சாதனை அறிக்கையை பாஜக அரசு வெளியிட்டுள்ளது.

இந்தச் சாதனை அறிக்கை பொய்களால் நிரப்பப்பட்டுள்ளது.

பெண்களின் பாதுகாப்பு குறித்து மாநில அரசு பெருமிதம் கொள்கிறது.

கொடூரமான உன்னாவ் பாலியல் சம்பவத்துக்கு பிறகும் மாநிலத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடக்கின்றன. இது மாநிலத்தின் பெண்களின் பாதுகாப்பை அம்பலப்படுத்துகிறது.

இதிலிருந்து மாநில அரசாங்கம் எப்போது விழித்துக் கொள்ளப் போகிறது’ என்று கேள்வியெழுப்பி உள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்கீம்பூரில் அண்மையில் பெண் ஒருவர் கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு அவரின் மூக்கு வெட்டப்பட்டது.

இதனை நினைவுபடுத்தி பிரியங்கா காந்தி இந்த டுவிட்டை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை