உலகளவில் வாட்ஸ் ஆப் சேவை துண்டிக்கப்பட்ட விவகாரம்: சிரமத்திற்கு பயனர்களிடம் மன்னிப்பு கோரியது வாட்ஸ் ஆப் நிறுவனம்
டெல்லி: வாட்ஸ் ஆப் செயலியின் சேவை நேற்று சிலமணி நேரம் முடங்கியமைக்காக பயனர்களிடம் அந்நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் ஆப் சேவை நேற்று மாலையில் திடீரென முடங்கியது. இதனை தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் சேவை துண்டிக்கப்பட்டதால் புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்களை பரிமாற முடியாமல் பயனர்கள் கடும் திண்டாட்டத்திற்கு ஆளாகினர். சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் நிலைமை சரிசெய்யப்பட்டு மீண்டும் சேவை வழங்கப்பட்டது. இந்த நிலையில் சேவை துண்டிப்பால் தனது பயனாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக வாட்ஸ் ஆப் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. உலகளவில் 3 மணி நேரம் முடங்கிய வாட்ஸ் அப் சேவை: இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில், வாட்ஸ் அப் சேவை பல மணி நேரம் முடங்கியதால், அதன் பயனாளர்கள், அவதிப்பட்டனர். உலகின் மிகப்பெரும் தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ் அப் பயன்பாடு, எப்போதும் உச்சத்தில் இருக்கும். இந்நிலையில், இன்று மாலை 4.15 மணியளவில், வாட்ஸ் அப்பில், புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்ப முடியாத சூழல் உருவானது. இந்தியா, பிரேசில், மலேசியா, இந்தோனேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவின் குறிப்பிட்ட சில மாகாணங்கள் உள்ளிட்டவற்றில் வாட்ஸ் அப் சேவை பாதிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்குப் பின்னர் முழுமையாக இயங்கத் தொடங்கியது. தொழில்நுட்ப கோளாறா? அல்லது ஹேக்கர்களின் கைவரிசையா என்பது பற்றி தகவல் இல்லை. இதற்கிடையே, வாட்ஸ் அப் டவுன் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.