மோடிக்கு அன்னா ஹசாரே கடிதம் 426 பேரின் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன்?...நிர்பயா குடும்பத்துக்கு நீதிகோரி 20ல் மவுன விரதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மோடிக்கு அன்னா ஹசாரே கடிதம் 426 பேரின் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன்?...நிர்பயா குடும்பத்துக்கு நீதிகோரி 20ல் மவுன விரதம்

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, நாட்டில் குற்றம் உறுதி செய்யப்பட்ட 426 பேரின் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன்? என்றும், நிர்பயா குடும்பத்துக்கு நீதிகோரி, வரும் 20ம் தேதி மவுன விரதத்தை  டெல்லியில் தொடங்க உள்ளதாகவும் கடிதம் எழுதியுள்ளார்.   மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:  நாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்ட எந்தவொரு குற்றவாளிக்கும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குற்றவாளி ஒருவருக்கு கடைசியாக 2005ம் ஆண்டு ஆகஸ்டில் தூக்கு நிறைவேற்றப்பட்டது.



 தற்போது, 426 குற்றவாளிகள் மரணதண்டனைக்கு காத்திருக்கிறார்கள். நீதிமன்ற அமைப்பின் மூலம் நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதங்கள், தடைகள் மற்றும் சிரமங்களை மக்கள் அநீதி என்று உணரத் தொடங்கியுள்ளனர்.

சமீபத்திய ஐதராபாத் சம்பவத்தில் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வெகுஜன ஆதரவு இருப்பதையே இது காட்டுகிறது. கொடூர குற்றவாளிகளை, என்கவுன்டர் போன்ற சம்பவங்களை நடத்தியே ஒழிக்க வேண்டும் என்று மக்கள்  இப்போது விரும்புகிறார்கள்.

பாலியல் பலாத்கார வழக்குகளில் தண்டனை வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தக் கூடாது. நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டும், ஏழு ஆண்டுகளாக நிறைவேற்ற வில்லை.



நிர்பயா  வழக்கின் தாமதம் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. அராஜகத்தை ஏற்படுத்தக்கூடும்.

கடந்த 2005ம் ஆண்டுக்கு பிறகு, நாட்டில் இதுபோன்ற வழக்கில் தூக்கு எதுவும் நிறைவேற்றவில்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அன்னா ஹசாரே கூறுகையில், ‘‘கடந்த 2012ல் டெல்லியில்  நடந்த சம்பவத்திற்கு நிர்பயா குடும்பத்துக்கு நீதி கோரி, வருகிற 20ம் தேதி முதல் ராலேகன்  பகுதியில் மவுன விரதம் கடைப்பிடிக்க உள்ளேன்.

இதுபோன்ற  குற்றங்களைத் தடுக்க அரசாங்கம் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், நான் காலவரையின்றி உண்ணாவிரதம் இருப்பேன்” என்றார்.

.

மூலக்கதை