கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியது

பெங்களூரு:  கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜ அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் 15 பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு
தொடங்கியது.   கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சி நடந்தது. கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜவினர் எத்தனையோ வழிகளில் முயன்றாலும் அதில் வெற்றி பெறமுடியவில்லை.

இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 17 எம்எல்ஏக்களின் மனதை மாற்றினர். அதன் பயனாக ஆர். ரோஷன்பெய்க், எஸ். டி சோமசேகர், கே. கோபாலய்யா, ஆனந்த்சிங், எம்டிபி நாகராஜ், பைரதி பசவராஜ், வி. முனிரத்னம், ரமேஷ்ஜாரகிஹோளி, மகேஷ்குமட்டஹள்ளி, பி. சி. பாட்டீல், எச். விஷ்வநாத், கே. ஆர். நாராயணகவுடா, பிரதாப்கவுடா பாட்டீல், சீமந்தபாட்டீல், டாக்டர் கே. சுதாகர், ஆர். சங்கர், சிவராம் ஹெப்பார் ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பி. எஸ். எடியூரப்பா தலைமையில் பாஜ அரசு பதவியேற்றது.

இதனிடையில் எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் காலியாகவுள்ள 17 தொகுதிகளில் ராஜராஜேஸ்வரிநகர் மற்றும் மஸ்கி ஆகிய இரு தொகுிதிகள் தவிர மற்ற 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதி (இன்று) வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. தேர்தல் களத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜ சார்பில் தலா 15, மஜத சார்பில் 12, தேசியவாத காங்கிரஸ் சார்பில் 1, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 2, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 45, சுயேட்சைகள் 75 என மொத்தம் 165 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதில் சிவாஜிநகரில் அதிக பட்சமாக 19 பேரும் குறைந்த பட்சமாக யல்லாபுராவில் 6 பேரும் போட்டியில் உள்ளனர்.

முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜ ஆட்சி தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பதை 15 தொகுதி வாக்காளர்கள் இன்று பதிவு செய்யும் வாக்கின் மூலம் தீர்மானிக்கவுள்ளனர். இடைத்தேர்தல் மூலம் கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பான நிகழ்வுகள் எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 9ம் தேதி பெங்களூருவில் மூன்று இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 11 மையங்களில் எண்ணப்படுகிறது. மின்னனு வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் அன்று பகல் 12 மணிக்குள் வெற்றி நிலவரம் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுகட்டாக பணம் பட்டுவாடா செய்யும் பாஜக தலைவர்

உத்திர  கன்னடா மாவட்டம் எல்லாப்பூர் தொகுதியில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக பாஜக வேட்பாளர் சிவராம் ஹெப்பாரின் நெருங்கிய  ஆதரவாளர் தொட்டமணி வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கும் வீடியோ வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க 100  நபர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை அவர் எண்ணி வினியோகம் செய்வது  வீடியோவில் பதிவாகியுள்ளது.

பாஜக பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு  இடைத்தேர்தலில் வெற்றி பெற முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சியினர்  குற்றம்சாட்டியுள்ளனர்.

.

மூலக்கதை