கட்சிக்கு முழுக்கு போடுவதாக வந்த ஊகங்களுக்கு முடிவு: கட்சி தாவல் என் ரத்தத்தில் இல்லை...மாஜி எம்எல்ஏ பங்கஜா முண்டே கருத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
கட்சிக்கு முழுக்கு போடுவதாக வந்த ஊகங்களுக்கு முடிவு: கட்சி தாவல் என் ரத்தத்தில் இல்லை...மாஜி எம்எல்ஏ பங்கஜா முண்டே கருத்து

மும்பை: பாஜ கட்சிக்கு முழுக்கு போடுவதாக வெளியான ஊகங்களுக்கு முடிவுகட்டும் வகையில், கட்சி தாவல் எண்ணம் என் ரத்தத்தில் இல்லை என்று, முன்னாள் எம்எல்ஏ பங்கஜா முண்டே தெரிவித்துள்ளார்.   பாஜ கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மகாராஷ்டிர முதல்வருமான மறைந்த கோபிநாத் முண்டேவின் மகளான பங்கஜா முண்டே, நேற்று பாஜவின் மூத்த தலைவர்களான வினோத் தவ்தே, ராம் ஷிண்டே மற்றும் எம்எல்ஏ பாபன்ராவ் லோனிகர் ஆகியோரை தெற்கு மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். இவர், நடந்து முடிந்த சட்டப்பேரவை ேதர்தலில் தோற்றதால், பாஜ கட்சியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாயின.



இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பங்கஜா முண்டே கூறுகையில், ‘‘நான் பாஜவை விட்டு வெளியேறவில்லை. கட்சி தாவல் என்பது என் ரத்தத்தில் இல்லை.

என்னுடைய ட்விட்டர் சுயவிவரக் குறிப்புப் பக்கத்தில் பாஜ கட்சியின் கொடி, சின்னத்தை அகற்றுவதன் மூலம் கட்சி மேலிடத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று எண்ணவில்லை. கட்சியை விட்டு வெளியேறுவதாக கூறுவது வதந்தி.

மேலும், எனது அரசியல் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக வெளியான ஊகங்களும் பொய்’’ என்றார்.
 
முன்னதாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து புதிய அரசு அமைத்துள்ள நிலையில், மாற்றப்பட்ட அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே பங்கஜா முண்டே பாஜவிலிருந்து விலக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது அவர் அதனை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



.

மூலக்கதை