ஆனி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக கடந்த 11ம் தேதி மாலை திறக்கப்பட்டது. 12ம் தேதி பிரதிஷ்டை தின பூஜைகளுக்குப் பின்னர் அன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. இந்நிலையில் ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். நேற்று வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், கணபதி ஹோமம் உட்பட வழக்கமான பூஜைகள் நடைபெறும்.