ரயில் டிக்கெட்டில் பிரதமர் மோடியின் புகைப்படம்: திரிணாமுல் காங்கிரஸ் புகார்

தினகரன்  தினகரன்
ரயில் டிக்கெட்டில் பிரதமர் மோடியின் புகைப்படம்: திரிணாமுல் காங்கிரஸ் புகார்

கொல்கத்தா: ரயில் டிக்கெட்டுக்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது குறித்து தேர்தல்  ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் விளம்பரம் ரயில்வே டிக்கெட்டுக்களில் இடம்பெற்றுள்ளது. இந்த விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் டிக்கெட்டுகளில் மோடியின் புகைப்படம் இடம்பெறுவது விதிமீறல் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் எழுதிய கடிதத்தில், “தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் ரயில்வே சார்பில் வழங்கப்படும் டிக்கெட்டுக்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜ அரசின் சாதனைகளும் விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய விளம்பரங்களை அச்சிடுவதை நிறுத்துவதுடன், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை