மத்திய பிரதேச காங்கிரசில் சலசலப்பு பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி; திக்விஜய் சிங்குடன் கமல்நாத் மோதல்
முன்னாள் மத்திய அமைச்சரும், காங் கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங், மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதற்குப் பதிலடி தரும்விதமாக மத்தியப்பிரதேசம் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் கூறுகையில், ‘பாஜவின் சாதகமான போபால், ஆனால், இவிதிஷா, இந்தூர் ஆகிய தொகுதிகளில் திக்விஜய் சிங் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா?’ என சவால் விடுத்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த திக்விஜய் சிங், ‘சவால்களை ஏற்றுக் கொள்வது எனக்குப் பழக்கம். ஜனதா தளத்திற்கு அலை வீசிய போதும், 1977ம் ஆண்டு ரகோகார் தொகுதியில் வெற்றி பெற்றவன்.
எனவே, தலைவர் (ராகுல் காந்தி) எங்குப் போட்டியிடச் சொன்னாலும், அங்கே கண்டிப்பாகப் போட்டியிடுவேன்’ எனக் கூறினார்.
இந்தூர் மக்களவைத் தொகுதியில் பாஜவைச் சேர்ந்த மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 1991 முதல் 2014 வரை தொடர்ந்து வெற்றிபெற்று வந்துள்ளார். இங்குக் கடைசியாகக் காங்கிரஸ் 1984ம் ஆண்டு வெற்றிபெற்றது.
விதிஷா மக்களவைத் தொகுதியில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1991ம் ஆண்டும், மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 2009, 2014 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்றனர். பாஜவின் கோட்டையாகக் கருதப்படும் மேற்கண்ட தொகுதியில், திக்விஜய் சிங் ஜெயித்துக் காட்டமுடியுமா என்று, முதல்வர் கமல்நாத் சவால்விட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் மத்தியப்பிரதேசத்தில் நான்கு கட்டமாக நடக்க உள்ளது.
.