ராஜாதி ராஜ... ராஜ மார்த்தாண்ட...
மும்மாரி பொழிகிறதா மந்திரியாரே. . . ’ என்ற அதே டயலாக்கை திரும்பத் திரும்பக் கேட்கிற மன்னர் காலமெல்லாம் மலையேறிவிட்டது. ஆனாலும், ஆசை விடுமா என்ன? ‘ஆண்ட பரம்பரைகள்’ சிலருக்கு, அவ்வப்போது ஆளும் ஆசை துளிர்ப்பது வாடிக்கை.
ஒடிசா மாநிலத்தில் இம்முறை மூன்று பேருக்கு அப்படி ஆசை துளிர்த்திருக்கிறது. முதலாமவர், அர்கேஷ் சிங் தியோ. 32 வயதுதான் ஆகிறது.
பத்னா சமஸ்தானத்து வழித்தோன்றல். லண்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு, அஞ்சல் வழியில் படித்துக் கொண்டிருக்கிறார்.
இவரது தாத்தா ராஜேந்திர நாராயண் சிங் தியோ ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் (1967 - 71). அப்பா அனங்க உதய சிங்தியோ பிஜேடி (பிஜூ ஜனதாதளம்) கட்சியின் மூத்த தலைவர் + முன்னாள் அமைச்சர்.
அண்ணன் காளிகேஷ் நாராயண் சிங்தியோ, பாலங்கிர் தொகுதியின் பிஜேடி சிட்டிங் எம்பி - இவ்வளவு ‘தகுதி’ போதாதா? ‘‘பாலாங்கிர் சட்டப்பேரவை தொகுதி சீட் கொடுத்தால், மக்களுக்கு சேவையாற்ற காத்திருக்கிறேன். . . ’’ என்கிறார்.
அடுத்து, கல்யாணிதேவி. பரலேகமுண்டி மகாராஜா கிருஷ்ண சந்திர கஜபதியின் கொள்ளுப்பேத்தி.
இவரது அப்பா கோபிநாத் கஜபதி பெர்ஹாம்பூர் தொகுதியில் இருமுறை காங்கிரஸ் எம்பியாக இருந்தவர். சமீபத்தில் பிஜேடி கட்சியில் சேர்ந்த கல்யாணி தேவி, கட்சித்தலைவரும், முதல்வருமான நவீன் பட்நாயக்கிடம், தனது ‘மக்கள் சேவை’ விருப்பத்தை பதிவு செய்திருக்கிறார்.
‘‘அரசியல் குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறேன். எனது விருப்பத்தை முதல்வரிடம் கூறியிருக்கிறேன்.
அவர் நல்ல முடிவு எடுப்பார். . . ’’ என்று பேட்டி கொடுத்த கையோடு, தேர்தல் பயணத்தை துவக்கி விட்டார். மூன்றாவது, மாளவிகா தேவி. இவரது கணவர் அர்கா கேசரி தியோ, காளஹந்தி தொகுதியின் சிட்டிங் எம்பி.
பிஜேடி தலைவர் நவீனை சமீபத்தில் சந்தித்த மாளவிகா, இந்தத் தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்.