உங்கள் கவலைகளே எங்களது கவலைகள்: மாணவர்களுக்கு ராகுல்காந்தி கடிதம்
டெல்லி: ஊழலை ஒழித்து மாணவர்கள் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று கட்சி தலைவர் ராகுல்காந்தி மாணவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். காங்கிரசின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் அணி (National Students Union of India NSUI) பெஹத்ர் பாரத் Behtar Bharat என்னும் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த அமைப்புக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், இன்றைய காலத்தில், விஞ்ஞானம், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம் ஆகியவற்றின் மூலம் நாடுகள் முன்னோக்கி செல்கின்றன என்றும் பகுத்தறிவு மற்றும் நீதி ஆகியவற்றைத் தழுவியே சமூகங்கள் முன்னேறுகின்றது இந்நிலையில், இந்திய மாணவர்கள் இவை அனைத்திலும் முன்னணியில் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, மாணவர்களோடு சேர்ந்து பணியாற்ற விரும்புகிறோம். மாணவர் பிரச்சினைகள் தேசிய பிரச்சினையாக இருப்பதால், மாணவர்களின் முன்னேற்றத்திற்கு இனி காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும் நாங்கள் உங்களை காப்பாற்ற ஊழலை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றும் உறுதி அளிக்கிறேன் என தெரிவித்துள்ளார். இருப்பினும், மாணவர்கள் அதிக கட்டணம், சிறந்த கல்லூரிகளில் சேருவதில் சிரமம், படிப்பிற்கு தகுந்த வேலை கிடைப்பது என்பன போன்ற பல போராட்டங்களை சந்தித்து வருகின்றனர். தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த பெஹத்ர் பாரத் மற்றும் இந்தியாவின் எதிர்காலம் Behtar Bharat Future of India) என்ற பிரச்சாரத்தின் மூலம் மாணவர்களின் சிரமங்களை அறிந்து அவற்றை தேசிய செயற் பட்டியலில் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்றார். மேலும், ராகுல் காந்தி காங்கிரசின் மாணவர் அமைப்பான NSUI-ல் சேரவும் மற்றும் சிறந்த இந்தியாவை உருவாக்கவும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். \'உங்கள் கவலைகளே எங்களது கவலைகள், உங்களது முன்னுரிமை காங்கிரஸ் கட்சியின் முன்னுரிமைகளாகும்,\' என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி எழுதிய இந்த கடிதத்தை இந்திய தேசிய மாணவர் அணி (NSUI) அதன் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.