மாணவியை ஆசிரியர் எட்டி உதைத்த சம்பவம் : சொந்த கல்லூரிக்கே சீல் வைக்கஉத்தரவிட்ட ஆந்திர அமைச்சர்
திருமலை: திருப்பதியில் மாணவியை ஆசிரியர் ஷூ காலால் எட்டி உதைத்த சம்பவம் தொடர்பாக, அமைச்சருக்கு சொந்தமான இன்டர்மீடியட் கல்லூரிக்கு உயர் கல்வித்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.திருப்பதி அன்னமய்யா சந்திப்பு அருகே, ஆந்திர கல்வித்துறை அமைச்சர் கண்டா சீனிவாசுக்கு சொந்தமான இன்டர்மீடியட் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பணிபுரியும் வேதியியல் துறை ஆசிரியர், மாணவி ஒருவரை சரியாக படிக்கவில்லை எனக்கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷூ காலால் எட்டி உதைத்தாராம்.இதுகுறித்து அந்த மாணவி பெற்றோர்களுக்கு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மாணவர் சங்கத்தினருடன் சேர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உயர்க்கல்வித் துறை அமைச்சரான கண்டா சீனிவாசராவ் இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து திருப்பதி, கடப்பா மாவட்ட கல்வி அலுவலர்கள் சந்திரமவுலி, விஸ்வநாத் நாயக் தலைமையிலான குழுவினர் விசாரணை செய்து அறிக்கையை சமர்ப்பித்தனர். இதையடுத்து அமைச்சர் கண்டா சீனிவாச ராவ் அந்த கல்லூரிக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.இதையடுத்து இன்டர்மீடியட் கல்லூரிகளின் வாரிய செயலாளர் விஜயலட்சுமி உத்தரவின்பேரில் சித்தூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் நேற்று முன்தினம் அந்த கல்லூரியை அதிரடியாக பூட்டி சீல் வைத்தனர்.இதுகுறித்து மாணவர் சங்கத்தினர் கூறுகையில், ‘‘மாணவியை ஷூ காலால் எட்டி உதைத்த ஆசிரியர் மாநிலத்தின் வேறு எந்த கல்லூரியிலும் பாடம் நடத்தாத வகையில் அவருக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.