நிரவ்மோடி 14,536 கோடி மோசடி பஞ்சாப் நேஷனல் வங்கி அறிக்கை
மும்பை: மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி ரூ. 14536 கோடி கடன் மோசடி செய்துவிட்டதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தனது காலாண்டு நிதி நிலை அறிக்கையில் கூறியுள்ளது.
மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய குடும்பத்தினரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கி விட்டு அதை திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்தனர்.
இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சி. பி. ஐ. யிடம் புகார் அளித்த நிலையில் நிரவ் மோடியும், அவருடைய குடும்பத்தினரும் வெளிநாடு தப்பிச்சென்று விட்டனர். இந்த வழக்கில் நேற்று முன்தினம் சி. பி. ஐ.
தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் நிரவ் மோடி அவருடைய குடும்பத்தினர் தவிர, பஞ்சாப் நேஷனல் வங்கியின் 4 உயர் அதிகாரிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்த 4வது காலாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ளது.
அதில், “நிரவ் மோடி வங்கிக்கு செலுத்தவேண்டிய ஒட்டு மொத்த கடன் தொகை ரூ. 14,536 கோடி ஆகும். வங்கி உறுதியளிப்பு கடிதங்களை தவறான முறையில் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளிலும் இந்த மோசடி நடந்து இருக்கிறது.
இதில் நிரவ் மோடியின் ஆபரண நிறுவனமும், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலரும் ஈடுபட்டு உள்ளனர்” என்று கூறப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில் நிரவ்மோடி தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவர் எங்கிருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது.
அவர் ஹாங்காங்கில் இருப்பதாகவும், அவரை பிடிக்க சீனாவின் உதவி கோரப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.