சசிகலா தலைமையில் இயக்கம் செயல்படுகிறது டிடிவி தினகரன் பேச்சு
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக டிடிவி தினகரன் பங்கேற்கும் முதல் பொதுக் கூட்டம் மதுரை மேலூரில் இன்று நடந்து வருகிறது. தலைமைக்கழகம் தோற்றத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில் 14 எம்.எல்.ஏ.க்கள், 5 எம்.எல்.ஏ.க்கள் கலந்துக் கொண்டு உள்ளனர். கூட்டத்தில் பேசி வரும் டிடிவி தினகரன் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா தலைமையில் இயக்கத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றோம் என்றார்.
அவர் பேசுகையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா தலைமையில் இயக்கத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றோம். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வழி நடத்திய பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதி ஏற்போம். எம்.ஜி.ஆரால் முதல்-அமைச்சர் ஆக்கப்பட்ட கருணாநிதி அவரை கட்சியில் இருந்து நீக்கினார். கருணாநிதியின் ஊழல் ஆட்சியை எதிர்த்து 1977-ல் அதிமுக ஆட்சியை எம்.ஜி.ஆர். உருவாக்கினார். எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்தவர்களால் அவர் இருக்கும் வரையில் முதல்-அமைச்சர் ஆக முடியவில்லை. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் பிளவுபட்ட அதிமுகவை ஜெயலலிதா மீட்டெடுத்தார்.
சசிகலா முதல்வராகி இருப்பார்
சசிகலா நினைத்து இருந்தால் ஜெயலலிதா மறைந்த டிசம்பர் 5-ம் தேதியே முதல்-அமைச்சர் ஆகியிருப்பார். சசிகலா சிறைக்கு செல்லும் முன் என்னையோ, எங்கள் குடும்பத்தில் யாரையாவது முதல்-அமைச்சர் ஆக்கியிருக்க முடியும். ஜெயலலிதா அமல்படுத்திய சமூக நலத் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றி வருகிறது. பல எம்.எல்.ஏ.க்கள் உடலால் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருக்கலாம், ஆனால் உள்ளத்தினால் மேலூரில் உள்ளார்கள். சசிகலா சிறைக்கு சென்றதும் அவருடைய பேனர்கள் கூட தலைமை அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்டது. இரட்டை இலை சின்னத்தை மீட்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பதவிக்கு ஆசைப்படுபவர்கள் நாங்கள் அல்ல என்பதை புரியாத மூடர்களே எங்களை எதிர்க்கின்றனர் என்றார்.
கூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏ.க்களை விட்டுச் சென்று இருந்தால் என்ன ஆகியிருக்கும்? என கேள்வி எழுப்பி உள்ளார். 30 பேர் தலைமை செயலகத்தில் இருந்துக் கொண்டு இந்த இயக்கத்தை நடத்திவிடலாம் என நினைக்கின்றனர் என கூறி தொடர்ந்து தினகரன் பேசி வருகிறார்.