பழைய 500 ரூபாய் நோட்டில் இருந்து மின்சாரம் தயாரித்துள்ள ஒடிசா இளைஞர்: குவியும் பாராட்டுக்கள்

தினகரன்  தினகரன்

நியாபடா: பழைய 500 ரூபாய் நோட்டில் இருந்து மின்சாரம் தயாரித்துள்ள ஒடிசா இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. பழைய ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தது முதல் தற்போது வரை கருப்பு பணத்தை பதுக்கிய பலர், பழைய ரூபாய் நோட்டுக்களை என்ன செய்வதென்று அறியாமல் கிழித்து குப்பைத் தொட்டிகளில் எறிந்து வருகின்றனர். ரிசர்வ் வங்கியே பழைய நோட்டுக்களை என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடி வருகிறது. ஆனால், ஒடிசாவின் நியாபடா மாவட்டத்தைச் சேர்ந்த லச்மன் டண்டி என்ற 17 வயது இளைஞர், செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500 நோட்டில் இருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார். விவசாயி மகனான லச்மன், தானே பல்ப் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அதில் வரும் வருமானத்தைக் கொண்டு கல்லூரியில் படித்து வருகிறார். தனது ஆராய்ச்சி பற்றி லச்மன் கூறுகையில், செல்லாத ரூபாய் நோட்டை கிழித்து எறிந்தபோது, சூரிய ஒளியில், ரூபாய் நோட்டின் மீது இருந்த சிலிகான் பூச்சு இருப்பதை கண்டேன். அந்த சிலிகான் பூச்சில் எலக்ட்ரிக் வயரை இணைத்து, டிரான்ஸ்பார்மருடன் பொருத்தி, மின்சாரத்தை தயாரித்தேன். ஒரு 500 நோட்டில் இருந்து 5 வோல்ட்ஸ் மின்சாரம் தயாரிக்க முடியும். இதனை தயாரிக்க எனக்கு 15 நாட்கள் மட்டுமே ஆனது. இதனை முதலில் எனது கல்லூரியில் தான் செய்து காட்டினேன். அப்போது யாரும் கண்டு கொள்ளவில்லை. அதனால் இதுகுறித்த பிரதமர் அலுவலகம் மற்றும் முதல்வருக்கு கடிதம் எழுதினேன். எனது கண்டுபிடிப்பை பிரதமர் பாராட்டினால் அதுவே எனக்கு கிடைத்த பெருமையாக நினைப்பேன் என்றார். இந்த தகவலை அறிந்த பிரதமர் அலுவலகம், இத்திட்டம் குறித்து ஆய்வு செய்து, அறிக்கையாக தயாரித்து அனுப்பும்படி ஒடிசா அரசுக்கு ஏப்ரல் 12-ம் தேதி கடிதம் அனுப்பியது. ஒடிசா அரசும் சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தி, அறிக்கை தயாரித்து மே 17 அன்று பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இத்தகவல் பரவ துவங்கியதை அடுத்து லச்மனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மூலக்கதை