டிஜிட்டல் பரிவர்த்தனை: 10 லட்சம் பேருக்கு பரிசு

தினமலர்  தினமலர்
டிஜிட்டல் பரிவர்த்தனை: 10 லட்சம் பேருக்கு பரிசு

புதுடில்லி: ''டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், பரிசு அளிக்கும் திட்டத்தின் கீழ், 58 நாட்களில், 10 லட்சம் பேருக்கு, 153 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்பட்டு உள்ளது,'' என, 'நிடி ஆயோக்' அமைப்பின் தலைமை செயல் அதிகாரி, அமிதாப் காந்த் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், நேற்று கூறியதாவது: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக, டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு பரிசு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இம்மாதம், 20 வரையில், 58 நாட்களில், இந்த திட்டத்தின் கீழ், 9.8 லட்சம் பேருக்கு, 153.5 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது; இதில், 9.24 லட்சம் பேர் பொதுமக்கள், 56 ஆயிரம் பேர் வர்த்தகர்கள். மஹாராஷ்டிரா, தமிழகம், உத்தர பிரதேசம், ஆந்திரா, டில்லி ஆகியவை, அதிகளவு டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொண்ட மாநிலங்களில், முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொண்டோரில் பெரும்பாலானோர், 21 - 30 வயதுக்குட்பட்டவர்கள். 60 வயதுக்கு மேற்பட்டோரும் கணிசமான அளவு உள்ளனர். ஆனால், வயதானவர்கள், புதிய தொழில்நுட்பத்துக்கு மாறுவதில் தயக்கம் காட்டுவது தெரியவருகிறது. அதற்காகத்தான், மக்களை ஊக்குவிக்கும் வகையில், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு பரிசளிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வரும், ஏப்., 14 வரை, இந்த பரிசளிப்பு திட்டம் நடைமுறையில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை