நடுங்கும் முன்னாள் அமைச்சர்கள் சசிகலா எடுத்த சபதம் ஏற்படுத்தும் கிலி

தினமலர்  தினமலர்
நடுங்கும் முன்னாள் அமைச்சர்கள் சசிகலா எடுத்த சபதம் ஏற்படுத்தும் கிலி

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அடைந்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார், அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா. அங்கு செல்வதற்கு முன், சென்னையில் இருந்து பெங்களூருக்கு காரில் புறப்பட்ட சசிகலா, சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்குச் சென்று வணங்கினார். அப்போது, மூன்று முறை சமாதியில் குனிந்து குனிந்து கையால் ஓங்கி ஓங்கி அறைந்து, சபதம் எடுத்தார்.

அந்த காட்சிகளை அவருக்கு பின்னாலேயே நின்று பார்த்தவர்கள் முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திராவும், வளர்மதியும். சற்று தள்ளி நின்றவர், தலைமைக் கழக நிர்வாகியான மகாலிங்கம்.

இவர்கள் மூவருக்கு மட்டுமே, சசிகலா எடுத்த சபதங்கள் குறித்து முழுமையாக தெரியும் என்பதால், அவர்கள் எங்கு போனாலும், சசிகலா சபதம் குறித்தே கேட்கின்றனராம். அடிக்கடி செல்போனில் தொடர்பு கொள்ளும் பொது மக்களும், கட்சிக்காரர்களும், சசிகலா சபதம் குறித்து கேட்பதால், பல சமயங்களில் வளர்மதியும், கோகுல இந்திராவும் செல்போனை ஆப் செய்து விடுவதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் தங்களுக்கு சபதம் குறித்து எதுவும் தெரியாது என்று சொல்லி வருவதால், அவர்கள் வாயிலிருந்து வார்த்தைகளை பெற நினைக்கும் பொதுமக்கள், இப்படித்தானே சசிகலா சபதம் எடுத்தார் என, சம்பந்தமில்லாமல் பலவற்றையும் கூறி, அவர்கள் வாயால், சபதங்களை அறிய முயல்கின்றனராம்.

விட்டால் போதும் என்று, அவர்கள் சொல்லும் தகவலுக்கு ஆமாம் என்று சொல்லி, அது மறுமுனையில் டேப் செய்யப்பட்டு, வாட்ஸ் ஆப்பில் வெளியானாலோ, கட்சித் தலைமையாக இருக்கும் டி.டி.வி.தினகரனுக்குச் சென்றாலோ, கட்சியில் தங்களுக்கு சிக்கல் ஏற்படலாம் என அஞ்சி நடுங்குகின்றனர். அதனால், தற்போது எந்த போன் வந்தாலும், அவர்கள் நடுங்குவதாகக் கூறப்படுகிறது.


மூலக்கதை