தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள்!!!
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள் என்று புது தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தப் பிறகு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி அளிக்க வலியுறுத்தி தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்களைத் தொடர்ந்து, அவசரச் சட்டம் இயற்றுமாறு பிரதமர் மோடியை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்றுமாறு பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன். தமிழக கோரிக்கையை கவனமுடன் கேட்டுக் கொண்ட பிரதமர், தமிழர்களின் உணர்வுகளை முழுமையாக மதிப்பதாகவும், நன்கு அறிந்திருப்பதாகவும் மோடி கூறினார்.
அதே சமயம், ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இது குறித்து மத்திய அரசு எதுவும் செய்ய இயலாது. ஆனால், ஜல்லிக்கட்டு குறித்து மாநில அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.
எனவே, மாநில அரசு இது தொடர்பாக மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள். நன்மையே யாவும் நன்மையிலேயே முடியும் என்று தெரிவித்தார்.