எம்.பி.,க்கள் ராஜினாமா: மாணவர்கள் வலியுறுத்தல்

தினமலர்  தினமலர்
எம்.பி.,க்கள் ராஜினாமா: மாணவர்கள் வலியுறுத்தல்

சென்னை : 'ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, தமிழக, எம்.பி.,க்கள் ஒட்டுமொத்தமாக, ராஜினாமா செய்ய வேண்டும்' என, மாணவர்கள் வலியுறுத்தினர்.

மெரினா போராட்டத்தில், மாணவர்கள் பேசியதாவது: உலகில், பால் உற்பத்தியில், நம்நாடு சிறந்து விளங்குகிறது. இதனால், வெளிநாட்டு சோயா பால் உற்பத்தி நிறுவனங்களின் வர்த்தகம், இங்கு எடுபடாமல் போனது. அதனால், நம்நாட்டு மாட்டு இனங்களை அழிக்கும் திட்டத்தில், 'பீட்டா'வை கருவியாக கொண்டு, அந்நிறுவனங்கள் களமிறங்கி உள்ளன. அதன் ஒருபடி தான், ஜல்லிக்கட்டு தடை. ஜல்லிக்கட்டு என்பது,

தமிழனின் அடையாளம்; உரிமை; பாரம்பரியம். அதை தடை செய்ய நடக்கும் சதிக்கு, மத்திய அரசும் மவுனம் சாதிக்கிறது. தமிழரின் உணர்வுகளை, அங்கு வெளிப்படுத்தும் கடமை, தமிழக, எம்.பி.,க்களுக்கு உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த, எம்.பி.,க்கள், பதவிக்கு ஆசைப்பட்டு, தமிழன் என்ற உணர்வை இழந்து விட்டனர். எனவே, தமிழன் என்ற உணர்வு உள்ள தமிழக, எம்.பி.,க்கள், ஒட்டுமொத்தமாக பதவியை ராஜினாமா செய்து, ஜல்லிக்கட்டு ஆதரவை நிரூபிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.

மூலக்கதை