பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; களத்தில் இளங்கன்றுகள்...!

தினமலர்  தினமலர்
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; களத்தில் இளங்கன்றுகள்...!

மதுரை : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பெரும்பாலான கல்லூரிகள் விடுப்பு விட்டுள்ள நிலையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்ட அரசு பள்ளிகளுக்கு இன்று(ஜன.,20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வலுக்கும் போராட்டம்:


ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகத்தில் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தமிகத்தின் பெரும்பாலான கல்லூரிகளுக்கு நேற்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்தக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் முழு மூச்சுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இளைஞர்களின் போராட்டத்துக்கு பொதுமக்கள், வணிகர்கள், அரசு தனியார் ஊழியர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

முழு அடைப்பு:


முதல்வரின் டில்லி பயணத்தில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் முடிவு எட்டப்படாததையடுத்து போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. பெரும் இடங்களில் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் தமிழகம் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளிகள் விடுமுறை:


ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக தமிழத்திலுள்ள தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளன. இந்நிலையில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் திருப்பூர் ஆகிய 7 மாவட்ட அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து இன்று பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை