பேராசிரியர் பணிக்கு திரும்புகிறார் முன்னாள் பிரதமர்!
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் பேராசிரியர் பணிக்கு திரும்ப உள்ளதாக பஞ்சாப் பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.
அவை கூடாதா காலங்களில் வீட்டில் ஓய்வு எடுத்து வரும் அவரை சமீபத்தில் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக் கழக நிர்வாகிகள் சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர பேராசிரியராக பணி புரிந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தலாமே என்று வேண்டுகோள் விடுத்தனர். இதை மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டார்.
இந்த தகவலை பஞ்சாப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் அருண்குமார் குரோவர் தெரிவித்துள்ளார்.
மன்மோகன்சிங் சண்டிகார் வரும் போதெல்லாம் இங்கு வந்து உரையாற்றுவார் எனவும் மற்ற நேரங்களில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றுவார் என்றும் தெரிவித்துள்ளனர்.
மன்மோகன்சிங் 1954–ம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பொருளாதார பட்டம் பெற்றார். அதன்பிறகு 1957–ம் ஆண்டு அங்கு முதுநிலை பேராசிரியராக பணிபுரிந்தார்.
1966–ம் ஆண்டு ஐ.நா. பொருளாதார விவகாரங்களுக்கான அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு ரிசர்வ் வங்கி இயக்குனர்,
பொருளாதார ஆலோசகர் என பல பொறுப்புகளை வகித்த அவரை நரசிம்ம ராவ் காங்கிரசில் சேர்த்து அரசியலுக்கு கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.