நகரியில் சுரங்கப்பாதைகள் அமைத்து தரக்கோரி தெற்கு ரெயில்வே பொது மேலாளரிடம், நடிகை ரோஜா மனு

கதிரவன்  கதிரவன்
நகரியில் சுரங்கப்பாதைகள் அமைத்து தரக்கோரி தெற்கு ரெயில்வே பொது மேலாளரிடம், நடிகை ரோஜா மனு

நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர். இவர் தனது தொகுதி மேம்பாட்டு பணிகளுக்கு அதிகாரிகளை அடிக்கடி சந்தித்து மனு கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே உள்ள தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அலுவலகத்திற்கு நேற்று மாலை நடிகை ரோஜா ‘திடீர்’ என வந்தார். தனது தொகுதி சார்பாக அங்கு பொது மேலாளர் வஷிஷ்டா ஜோஹ்ரியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நகரி தொகுதியில் ரெயில்வே மேம்பாட்டு பணிக்காக ஏற்கனவே 2 முறை மனு கொடுத்திருக்கிறேன். அதில் 65 சதவீத பணிகள் நடந்துள்ளன. நகரியில் ஏகாம்பரம்குப்பம் பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டும், இன்று வரை பணிகள் தொடங்கவில்லை. அதேபோல புத்தூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே தண்டவாளங்கள் உள்ளது. அங்கு விபத்துகள் மூலம் ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர். எனவே அங்கும் ஒரு சுரங்கப்பாதை ஏற்படுத்தி தரக்கோரி மனு அளித்திருக்கிறோம். எங்கள் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமேலாளர் வாக்குறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

2016-01-28

மூலக்கதை