காஞ்சி அத்தி வரதர் வைபவம் நிறைவு

தினமலர்  தினமலர்
காஞ்சி அத்தி வரதர் வைபவம் நிறைவு

காஞ்சிபுரம் : காஞ்சி அத்தி வரதர் வைபவம் நேற்றுடன் நிறைவு பெற்றது. வரதராஜ பெருமாள் கோவிலில் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் வைப்பதற்கான சடங்குகள் முடிந்து அத்தி வரதரை வைத்தனர். இன்று முதல் வரதராஜப் பெருமாள் கோவிலில் வழக்கமான வழிபாடு நடைபெறும் என கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.


காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் ஜூலை 1ம் தேதி முதல் அத்தி வரதர் வைபவம் நடைபெற்று வந்தது. இதில் அத்தி வரதர் சயன கோலத்தில் 31 நாட்களும் நின்ற கோலத்தில் 16 நாட்களும் பொது மக்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் முதல் பொதுமக்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது.


வரதராஜ பெருமாள் கோவில் மேற்கு ராஜகோபுரம் நுழைவு வழியில் தரிசனத்திற்கு செல்வதற்கு வசதியாக தற்காலிக பாலம் அமைக்கப்பட்டதை நேற்று மதியம் முதல் அகற்றும் பணி நடந்தது. அத்தி வரதர் வைபவத்தில் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க செட்டித் தெரு முதல் ரங்கசாமி குளம் வரை சாலையில் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தன. அவற்றையும் நேற்று அகற்றினர்.


கோவிலை சுற்றியுள்ள தெருக்களில் அமைக்கப்பட்ட தடுப்புகள் இன்னும் அகற்றப்படவில்லை. இருந்தாலும் அந்த தெருக்கள் நேற்று தான் அமைதியாக காணப்பட்டன. நேற்று காலை முதல் பொதுமக்களை யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. அத்தி வரதரை அனந்தசரஸ் குளம் நீராழி மண்டபத்தில் வைப்பதற்கான சடங்குகள் நடைபெற்றன. அத்தி வரதருக்கு காலை மாலையில் பூஜைகள் செய்யப்பட்டன.


அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அத்தி வரதருக்கு மூலிகைகள் கலந்த தைலகாப்பு சாத்தப்பட்டது. காஞ்சி மாவட்ட கலெக்டர் பொன்னையா பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: காஞ்சி அத்தி வரதர் வைபவத்தில் பணிபுரிந்த அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். துப்புரவு பணியாளர்களுக்கு இன்னும் இரண்டு தினங்கள் பணி நீடிக்கும். போக்குவரத்து மாற்றத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து பணிகளும் முழுமையாக சீரமைக்க 15 நாட்கள் ஆகும். இந்த வைபவத்தின் போது போலி 'டோனர்' பாஸ் அச்சடித்ததாக ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இன்று முதல் கோவிலில் வழக்கமான சுவாமி வழிபாடு நடைபெறும். காஞ்சிபுரம் நகர் பகுதியில் இன்று முதல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். இதுவரை 1 கோடியே 7500 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். மாலையில் வரதராஜப் பெருமாள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதரை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக வரதராஜப் பெருமாள் புறப்பாடு நடைபெற்றதால் சுவாமி தரிசனத்திற்காக ஏராளமான மக்கள் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.




நேற்று இரவு 10:00 மணிக்கு அத்தி வரதரை நீராழி மண்டபத்தில் வைப்பதற்கான சாஸ்திரங்கள் முடிந்ததும் வசந்த மண்டபத்தில் இருந்து கொண்டு சென்று அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் நள்ளிரவு 12.10 மணிக்கு சயன கோலத்தில் வைத்தனர்.
இதற்கு பின் 40 ஆண்டுகள் கழித்து 2059ம் ஆண்டு தான் அத்தி வரதர் தரிசனம் கிடைக்கும்.

மூலக்கதை