இரண்டரை ஆண்டாக நடந்த வழக்கு முடிவுக்கு வந்தது: அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இரண்டரை ஆண்டாக நடந்த வழக்கு முடிவுக்கு வந்தது: அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்

புதுடெல்லி: உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக, கடந்த இரண்டரை ஆண்டாக நடந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் முடித்துவைத்துள்ளது. வரும் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அட்டவணையை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது. ‘தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாததால், மாநிலத்தின் வளர்ச்சி பணிகளுக்கு தடையாக உள்ளது.

எனவே, உச்சநீதிமன்றம் தலையிட்டு விரைந்து உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று மூத்த வழக்கறிஞர் ஜெயசுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘தமிழகத்தில் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி தொகுதி மறுவரையறை பணி நிறைவு பெற்று, தொகுதி மறுவரையறை தொடர்பான அறிவிப்பாணை அரசு இதழில் வெளியிடப்பட்ட பின்னரே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும்’ என்று மாநில தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த பிப்ரவரியில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பலமுறை இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போதும், மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு வாய்தாக்களை கேட்டு வழக்கை தாமதப்படுத்தி வந்தது.

தொடர்ந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தாமதமாவது குறித்தும், தொகுதி மறுவரையறை பணிகள் முற்றாக எப்போது முடிவடையும். எப்போது தேர்தல் நடத்தப்படும்.

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உடனடியாக பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று சமீபத்தில்  உத்தரவிட்டனர். இந்நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான மறுவரையறை செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை தேசிய தகவல் மையத்துக்கு வழங்கும் பணி மற்றும் மாவட்ட நிர்வாக பணியாளர்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, மேலும் 60 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும்’ என்று கோரியது.



மேலும், வருகிற அக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தில் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு மாநில தேர்தல் ஆணையத்துக்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், ‘அக்ேடாபர் இறுதிவாரத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளோம். நவம்பரில் தேர்தலை நடத்தி முடித்துவிடுவோம்’ என்று தெரிவிக்கப்பட்டது.



தொடர்ந்து மனுதாரர் ஜெயசுகின் குறிக்கிட்டு, ‘கடந்த இரண்டரை ஆண்டாக, இதேபோன்று பல்வேறு காரணங்களை கூறி தேர்தலை நடத்தாமல் காலதாமதம் செய்து வருகின்றனர். மக்களவை தேர்தலை நடத்தியபோது, தொகுதி சீரமைப்பு, வாக்காளர் பட்டியல் சரிசெய்யப்பட்டது எப்படி? எனவே, மக்களவை தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தியது போல், மாநில தேர்தல் ஆணையமும் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்’ என்று கூறினார்.

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, ‘அக்டோபர் இறுதி வாரத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அறிவிப்பாணை மற்றும் தேர்தல் அட்டவணையை வெளியிட்டு, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவால், வருகிற அக்டோபர் இறுதி வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளது.

கடந்த இரண்டரை ஆண்டாக நீடித்த இப்பிரச்னைக்கு, தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது.


.

மூலக்கதை