ஆந்திராவில் பதுங்கியுள்ள பிரபல ரவுடி மாட்டு சேகரை பிடிக்க தனிப்படை தீவிரம்
அண்ணாநகர்: ஆந்திராவில் பதுங்கியிருக்கும் பிரபல ரவுடி மாட்டு சேகரை பிடிக்க தனிப்படை போலீசார், ஆந்திரா சென்று தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை அண்ணா நகர், ஒய் பிளாக், 2வது தெருவை சேர்ந்தவர் மாட்டு சேகர் (52).
பிரபல ரவுடியான இவர் மீது வெடிகுண்டு வீச்சு, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரது மனைவி அனுராதா (40), அரசு வக்கீலாக பணியாற்றி வருகிறார்.
இவர், கடந்த 12ம் தேதி அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது கணவர் மாட்டு சேகர் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து அண்ணாநகர் உதவி கமிஷனர் குணசேகரன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாட்டு சேகர் அறையில் துப்பாக்கி மற்றும் கத்திகள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி அவரது வீட்டை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர் தங்கியிருந்த அறையில் லைசென்ஸ் இல்லாத நாட்டு கைத்துப்பாக்கி, 3 தோட்டாக்கள், 2 பட்டா கத்திகள் இருந்தது தெரியவந்தது.
அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் ரவுடி மாட்டு சேகர் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நேற்று ஆந்திராவுக்கு விரைந்தனர்.
அங்கு முகாமிட்டு ரவுடி மாட்டு சேகரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
.