டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய்ப் பொடி வீசி தாக்குதல்: ஒருவர் கைது!
புதுடெல்லி: டெல்லி தலைமைச் செயலகத்திற்குள் முதல்வா் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடியை தூவி தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கம்போல் இன்று தலைமைச் செயலகம் சென்று தனது பணிகளை கவனித்தார். தலைமை செயலகத்தின் 3ம் தளத்தில் உள்ள தனது அறையில் இருந்து மதிய உணவுக்காக வெளியே வந்துள்ளார். அப்போது பார்வையாளர்கள் பகுதியில் காத்திருத்திருந்த ஒரு நபர், கெஜ்ரிவாலைப் பார்த்து வணங்கி தன் குறைகளை கூறினார். கெஜ்ரிவாலும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது அந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மிளகாய்ப் பொடியை கெஜ்ரிவாலின் முகத்தை நோக்கி வீசினார். பாக்கெட்டுடன் மிளகாய்ப் பொடியை வீசியதால், கெஜ்ரிவாலின் மூக்குக் கண்ணாடி கீழே விழுந்து உடைந்தது. மிளகாய்ப்பொடி பட்டதால் முகத்திலும் எரிச்சல் ஏற்பட்டது. உடனே சுற்றி இருந்த பாதுகாவலர்கள் மற்றும் போலீசார் அந்த நபரைப் பிடித்து கைது செய்தனர். தாக்குதல் நடத்திய நபபரின் பெயர் அணில் குமார் என தெரிவித்துள்ள போலீசார், அவர் எதற்காக தலைமைச் செயலகம் வரை வந்து முதல்வர் மீது தாக்குதல் நடத்தினார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தலைமைச் செயலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, போலீஸ் பாதுகாப்பில் உள்ள குறைபாடுளை இந்த தாக்குதல் காட்டுவதாகவும், டெல்லியில் முதல்வருக்கே பாதுகாப்பு இல்லை என்றும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாத்தின் போது மை கொண்டு தாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.