ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள் சபரிமலையை கலவர பூமியாக்க முயற்சி : முதலமைச்சர் பினராயி விஜயன்

தினகரன்  தினகரன்
ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள் சபரிமலையை கலவர பூமியாக்க முயற்சி : முதலமைச்சர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள் சபரிமலையை கலவர பூமியாக்க முயற்சி செய்வதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதும் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28ம் தேதி தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிலக்கல், பம்பையில் நேற்று போராட்டம் வெடித்தது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து கோயிலுக்கு செல்வதற்காக பெண்கள் நேற்று வந்தனர். ஆனால் ஐயப்ப பக்தர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். அவர்களை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறை வாகனம் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள் சபரிமலையை கலவர பூமியாக்க முயற்சி செய்வதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சாதி ஆதிக்கத்தை ஊக்குவிக்கும் எண்ணத்தோடு தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், ஆதிவாசி இனத்தினர் நடத்திய பூஜை முறையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒழித்தது என்று கடுமையாக சாடியுள்ளார். பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை