இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உயிர்நாடி மதச்சார்பின்மையே: மன்மோகன் சிங் பேச்சு

தினகரன்  தினகரன்
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உயிர்நாடி மதச்சார்பின்மையே: மன்மோகன் சிங் பேச்சு

டெல்லி: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உயிர்நாடியாக இருப்பது மதச்சார்பின்மையே என முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் ஏ பி பரதன் நினைவு சொற்பொழிவு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சுயநலமும், பொறுப்பற்றத் தன்மையும் கொண்ட அரசியல்வாதிகள் சிலர், நமது அரசியல் நடைமுறையில் மதவாதம் எனும் கிருமியைப் பரப்பி வருகின்றனர் என்று தெரிவித்தார். அதனை பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய பணி நீதித்துறைக்கு உள்ளது என்றும் இத்தகைய முதன்மையான பணியில் இருந்து நீதித்துறையின் கவனம் திரும்பிவிடக் கூடாது என்று கூறினார். இதேபோல் தேர்தல் நடைமுறைகளில் மதம், மத உணர்வுகள், பாகுபாடுகள் உட்புகாமல் காக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும் என்று தெரிவித்தார். மதச்சார்பின்மை கட்டமைப்பு வலுவிழந்தால், வளர்ச்சி, ஜனநாயகம் என அனைத்து நிலைகளிலும் நாடு வலுவிழக்கும் என்றும் மதச்சார்பின்மையை காப்பதில் நீதித் துறைக்கு இணையான பங்கு ஊடகங்களுக்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.மேலும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் ராணுவம், மதச்சார்பற்ற தன்மைக்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. அதில், பிரிவினைவாத கோஷம் ஏற்பட்டு, அதன் புனித தன்மையை கெடுத்துவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை