கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த சச்சின்

தினமலர்  தினமலர்
கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த சச்சின்

கோல்கட்டா : மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, ஜாதவ்பூர் பல்கலை சார்பில் வழங்கப்பட இருந்த, கவுரவ டாக்டர் பட்டத்தை, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், 45, ஏற்க மறுத்துவிட்டார்.

மேற்கு வங்கத்தில், உள்ள ஜாதவ்பூர் பல்கலையின், 63ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, டிச., 24ல் நடக்கவுள்ளது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின், முன்னாள் நட்சத்திர வீரர், சச்சின் டெண்டுல்கருக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்க, பல்கலை நிர்வாகம் முடிவு எடுத்தது. இது குறித்து, சச்சினுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க, சச்சின் மறுத்து விட்டார்.

ஏற்கப்போவதில்லை:

இது குறித்து, பல்கலை துணை வேந்தருக்கு, அவர் அனுப்பிய கடிதத்தில், கவுரவ டாக்டர் பட்டம் பெறுவது, தார்மீக ரீதியில் தனக்கு சரியாக படவில்லை என தெரிவித்துள்ளார். ஏற்கனவே, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள, ஆக்ஸ்போர்டு பல்கலை, தனக்கு கவுரவ டாக்டர் பட்டம் தர முன் வந்தபோதும், அதை ஏற்க சச்சின் மறுத்து விட்டார். வேறெந்த பல்கலை இந்த நடவடிக்கை மேற்கொண்டாலும், அதை ஏற்கப்போவதில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

மேரி கோமுக்கு...

சச்சினின் முடிவு குறித்து, பல்கலை வேந்தரும், மாநில கவர்னருமான, கேஷரிநாத் திரிபாதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த பட்டத்தை, குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு வழங்க, பல்கலை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

மூலக்கதை