திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் குவிந்து கிடக்கும் நிவாரண பொருட்களை உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்ப உத்தரவு
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து அனுப்பப்பட்டு குவிந்து கிடக்கும் நிவாரண பொருட்களை, உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்க கேரள மனித உரிமை ஆணையம் வருவாய்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக நாடு முழுவதும் இருந்து ஏராளமான நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு வாகனங்கள் மற்றும் ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டன.அந்த வகையில் ரயில்களில் டன் கணக்கில் வந்த நிவாரண பொருட்கள் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் கடந்த 2 வாரங்களாக குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் குடிநீர், மருந்து, துணி வகைகள் உள்பட ஏராளமான பொருட்கள் உள்ளன. மழை பாதிப்பு முடிந்து 2 வாரங்களுக்கு மேலாகியும் ரயில் நிலையத்திலேயே நிவாரண பொருட்கள் கேட்பாரற்று குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் இந்த பொருட்களை உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனகேட்டு ரஹீம் என்பவர், கேரள மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். இதனை விசாரித்த ஆணைய தலைவர் ஆன்டனி டோமினிக், உடனடியாக அனைத்து பொருட்களையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்க வருவாய் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.