மத்திய நீர்வள ஆணையரே காவிரி மேலாண்மை ஆணையராக நியமனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய நீர்வள ஆணையரே காவிரி மேலாண்மை ஆணையராக நியமனம்

சென்னை: மத்திய நீர்வள ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஏ. கே. சின்ஹா, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் தலைவராக செயல்படுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆண்டு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. அதில் ஆணையத்தின் தலைவராக மசூத் உசேன், காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவராக நவீன்குமாரும் நியமிக்கப்பட்டனர்.

இதில் ஒவ்வொன்றிலும் தமிழகம் உள்பட 4 மாநிலங்களின் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து ஆணையம், ஒழுங்காற்று குழுவின் கூட்டம் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராகவும், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராகவும் இருந்த மசூத் உசேனின் பதவி காலம் கடந்த 30ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து மத்திய நீர்வள ஆணையத்தின் புதிய ஆணையராக ஏ. கே. சின்ஹா நியமிக்கப்பட்டார்.

இதனால் காவிரி ஆணையத்தின் தலைவராகவும் இவரே செயல்படுவாரா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான நியமன குழு இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அதில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக ஏ. கே. சின்ஹாவை நியமனம் செய்ததற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. மேலும் இதில் முந்தைய நிலையை போன்றே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராகவும் ஏ. கே. சின்ஹா செயல்படுவார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய நீர்வள ஆணையம், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகிய இரண்டுக்கும் தனித்தனி தலைவரை நியமிக்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை