வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி: ஏப்.26-ம் தேதி வேட்பு மனு தாக்கல் என தகவல்

தினகரன்  தினகரன்
வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி: ஏப்.26ம் தேதி வேட்பு மனு தாக்கல் என தகவல்

லக்னோ: பிரதமர் மோடி ஏப்ரல் 26-ம் தேதி உத்திரப்பிரசேத மாநிலம் வாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி  மக்களவை உறுப்பினராக உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்து 3,71,784 வாக்கு வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றார்.  இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சமீபத்தில், ‘கட்சி விருப்பப்பட்டால் தான் மக்களவை தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறேன்’ என்று அறிவித்திருந்தார். தற்போது 2019-ம்  தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை எதிர்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காரணம், இன்னும் வாரணாசி தொகுதிக்கு காங்கிரஸ் தரப்பில் இன்னும்  வேட்பாளர் அறிவிக்காததால் பிரியங்கா மீது பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருந்து நடைபெறும் பிரமாண்ட பேரணியில் பங்கேற்க பிரதமர் மோடி உள்ளார். அதைத் தொடர்ந்து காலபைரவர் கோவிலில் வழிபாடு, பின்னர் கங்கை ஆரத்தி ஆகியவற்றில்  பங்கேற்கிறார். தொடர்ந்து ஏப்ரல் 26-ம் தேதி காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபட்ட பின்னர், பிரமாண்ட பேரணியில் பங்கேற்றுவிட்டு பிரதமர் மோடி, வாரணாசி தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக பாஜக  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மே 19-ம் தேதி நடைபெறும் ஏழாவது மற்றும் கடைசிக் கட்ட தேர்தலில் வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை