சிலை கடத்தல் வழக்கில் யாரையும் தன்னிச்சையாக கைது செய்யக்கூடாது! பொன்.மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட் ‘செக்’

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிலை கடத்தல் வழக்கில் யாரையும் தன்னிச்சையாக கைது செய்யக்கூடாது! பொன்.மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட் ‘செக்’

புதுடெல்லி : சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் பணி நீடிப்பு செல்லும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அவர், ஏடிஜிபி அபயகுமார் சிங்கின் கீழ் செயல்பட வேண்டும். மேலும், தன்னிச்சையாக எவரையும் அவர் கைது செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் கடந்த நவம்பர் 30ம் தேதி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற போலீஸ் ஐஜி பொன். மாணிக்கவேலை நியமித்தது. இந்த உத்தரவுக்கு எதிராகவும், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

ஆனால், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரியும், பொன். மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்ததை உறுதிப்படுத்தவும் கோரி, உச்சநீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், கே. எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.



கடந்த பிப்ரவரி 21ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது,  எதிர்மனுதாரர் யானை ராஜேந்திரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர். பசந்த் ஆஜராகி, ‘‘சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், திறமையான அதிகாரி என்பதாலும்  பொன். மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது’’ என்றார்.
தொடர்ந்து, மற்றொரு எதிர்மனுதாரரான பொன். மாணிக்கவேல் சார்பில் வழக்கறிஞர் ஆர். ஆனந்த் பத்மநாபன் வாதிடுகையில்,  ‘‘பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கடந்த ஓராண்டில் அக்டோபர் வரை மட்டும் 270 சிலைகளை மீட்டுள்ளது’’  என்றார்.   தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே. கே. வேணுகோபால் வாதிடுகையில்,  ‘‘பொன். மாணிக்கவேல் தனக்கு அரசியலமைப்பு பதவி வழங்கப்பட்டுள்ளதாக நினைத்துக் கொள்கிறார். அவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதால், வேறு எந்த அதிகாரியும் நேர்மையாக செயல்படவில்லை என்று அர்த்தம் கொள்ள முடியாது’’ என்றார்.

மேற்கண்ட வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அசோக் பூஷண், கே. எம். ஜோசப் அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பை அறிவித்தது.

அதில், ‘பொன். மாணிக்கவேல் பணி நீடிப்பு தொடரலாம். அவர் இந்த வழக்கில் யாரையும் தன்னிச்சையாக கைது செய்யக்கூடாது.

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து விபரங்களையும் தமிழக அரசு நியமித்த ஏடிஜிபி அபய்குமார் சிங்கிடம் தெரிவிக்க வேண்டும்.   அதனால், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது’ என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை