அசாமில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 114- ஆக உயர்வு!

தினகரன்  தினகரன்
அசாமில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்வு!

கவுகாத்தி: அசாமில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 114- ஆக உயர்ந்துள்ளது. அசாம் மாநிலம், கோலாகாட் மாவட்டத்தில் உள்ள சல்மீரா எஸ்டேட்டில் கடந்த வியாழக்கிழமை கள்ளச்சாராயம் குடித்த பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அதனை அடுத்து ஜோர்காட் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ரூ.10, ரூ.20-க்கு விற்கப்பட்ட அந்தச் கள்ளச்சாராயத்தில் நச்சுத்தன்மை அதிகம் இருந்துள்ளது. அதனால் அதைக் குடித்த தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.அதனை அடுத்து ஜோர்காட் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 340 பேரில் 85 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நேற்று தகவல் வெளியானது.  இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85-ல் இருந்து தற்போது 114-ஆக உயர்ந்துள்ளது. ஜோர்காட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 36 பேர் பெண்கள். இந்நிலையில் மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திப்ருகர் மருத்துவமனையில் இருந்தும், தேஷ்பூர் மருத்துவமனையில் இருந்தும் டாக்டர்கள் குழுக்கள் கோலாகாட் விரைந்துள்ளனர். இந்தச் சோக சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள அசாம் அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து  டிஜிபி, தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் சோனோவால் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை