இந்தியாவில் உதவி பேராசிரியராக பணியாற்ற வெளிநாட்டில் டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கு நேரடியாக அனுமதி!
இந்தியாவில் உதவி பேராசிரியராக பணியாற்ற 500 வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கு நேரடியாக அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக யுஜிசி தெரிவித்து உள்ளது.
உதவி பேராசிரியர் பணிக்கான புதிய விதிமுறையை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக யுஜிசி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பல்கலைக் கழகங்களில் நேரடியாக உதவி பேராசிரியராக பணியாற்ற வெளிநாட்டில் உள்ள 500 முக்கிய பல்கலைக் கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இவர்கள் கலை, வர்த்தகம், கல்வி, சட்டம், சமுக அறிவியல், அறிவியல், மொழிகள், நூலக அறிவியல், உடற்கல்வி, இதழியல் மற்றும் ஊடகவியல் ஆகிய துறைகளில் பிஎச்டி முடித்திருந்தால் அவர்கள் இங்கு உதவி பேராசிரியராக பணியாற்றலாம்.
இதன் மூலம், இந்திய மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த அறிவைப் பெறலாம். நேரடி நியமனம் என்பது எழுத்துத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அதில், நேர்காணல் தீர்மானிக்கும் காரணியாக செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.