2020ம் ஆண்டு முதல் மண்ணெண்ணெய் மானியத்தை முழுவதும் ரத்து செய்ய மத்திய அரசு திட்டம்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியத்தை வருகிற 2020ம் ஆண்டு முதல் முழுவதும் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமையல் எரிவாயு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாட்டில் மண்ணெண்ணெயை எரிபொருளாக பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. அதே நேரத்தில் மண்ணெண்ணெய்க்கு வழங்கப்பட்டு வந்த மானியம் படிப்படியாக குறைக்கப்பட்டதும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் இன்னும் 2 ஆண்டுகளில் மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியத்தை முழுவதும் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டம் மூலமும், சவுபாக்யா திட்டம் மூலமும் 100 சதவீதம் மக்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக தினசரி மண்ணெண்ணெய் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மண்ணெண்ணெய்க்கு மட்டும் கடந்த 2016-17ம் ஆண்டில் ரூ.7.595 கோடி மானியம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் அது ரூ.4.500 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 40% குறைவு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே நிலையை படிப்படியாக பின்பற்றி வருகிற 2020-ம் ஆண்டில் மண்ணெண்ணெய்க்கான மானியம் முழுவதையும் ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னோடியாக சில மாநிலங்களுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவு குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை