வதந்தியால் கொலைகள்; கடும் நடவடிக்கைக்கு அரசு முடிவு
புதுடில்லி : வதந்தியை நம்பி, ஒருவரை அடித்துக் கொலை செய்யும் பொதுமக்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
சமீபகாலமாக, குழந்தை கடத்தல்காரர்கள், மாடு திருட வந்தவர்கள் என நினைத்து, சந்தேகத்தின் அடிப்படையில், பொதுமக்கள், பலரை அடித்துக் கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, வதந்தியை நம்பி, பொதுமக்களை அடித்துக் கொல்வோரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க, சட்ட திருத்தம் கொண்டு வர, மத்திய அரசு ஆலாசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: வதந்தியை நம்பி, பொதுமக்களை அடித்துக் கொல்வோரின் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க, மாநில அரசுகளும், சட்டத்திருத்தம் செய்து, சட்டசபைகளில் அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.