தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் டெல்லியில் ஜூலை 24ல் மாநாடு: விக்கிரமராஜா அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் டெல்லியில் ஜூலை 24ல் மாநாடு: விக்கிரமராஜா அறிவிப்பு

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் டெல்லியில் வரும் ஜூலை 24ம் தேதி மாநாடு நடைபெற உள்ளதாக விக்கிரமராஜா அறிவித்துள்ளார். அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் ஆட்சிமன்றக்குழு கூட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவரும்,  அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் முதன்மை துணைத் தலைவருமான விக்கிரமராஜா பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் அவர் பேசியதாவது: வருகின்ற ஜூலை 23, 24, 25 ஆகிய தேதிகளில் டெல்லியில் பேரணி மற்றும் மாநாடு நடைபெறவுள்ளது.



அதில் சில்லரை வணிகத்தில் வால்மார்ட் போன்ற அந்நிய நிறுவனங்களின் ஆக்கிரமிப்பை தடை செய்தல், ஜி. எஸ். டி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டத்தில் உள்ள பிரச்னைகள் போன்றவற்றிற்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மேலும் இந்த பேரணி மற்றும் மாநாட்டில் தமிழகத்திலிருந்து 1000க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்க உள்ளனர்.



இந்த மாநாட்டில் அகில இந்திய வணிகர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், அவர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை முழுமையாக அகற்றிட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வணிகர்களுக்கு எதிரான தண்டனைச் சட்டங்களில் உள்ள சிறை தண்டனை மற்றும் அபராதங்களை நீக்கிடவும் பல முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பேரணியில் அகில இந்திய வணிகர் சம்மேளனத் தலைவர் பி. சி. பார்டியா, பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேலவால் மற்றும் அனைத்து மாநில நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு கூறினார்.

.

மூலக்கதை