ஏடிஎம்களில் பண தட்டுப்பாடு தீருமா? 500 ரூபாய் நோட்டு அச்சடிக்க மை இல்லை
நாசிக்: நாடு முழுவதும் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு நிலவுவதாக கடந்த சில நாட்களாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக தெலங்கானா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் பல மாதங்களாக பண தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாயின.
இதனை மத்திய அரசும் ஒப்புக் கொண்டது. விரைவில் பணத்தட்டுப்பாடு நீங்கும் என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி அளித்தார்.
ரூ. 500 நோட்டுகள் 5 மடங்கு கூடுதலாக அச்சடிக்க உத்தரவிடப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தது.
இந்நிலையில் 500 ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பிரசில் மை தட்டுப்பாடு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கி சார்பில் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் 4 அச்சகங்களில், மராட்டியத்தின் நாசிக்கில் உள்ள அச்சகம் முக்கியமானது. 2,000 ரூபாய் நோட்டுகளை தவிர மீதமுள்ள அனைத்து நோட்டுகளும் இங்கு அச்சிடப்படுகின்றன.
இங்கு தற்போது ரூ. 200 மற்றும் ரூ. 500 நோட்டுகள் அச்சிடுவதற்கான ‘மை’க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்த நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டு இருப்பதாக அச்சக ஊழியர் சங்கங்களில் ஒன்று கூறியுள்ளது. இது குறித்து அந்த சங்கத்தின் தலைவரான ஜக்திஷ் கோட்சே கூறுகையில், ‘ரூபாய் நோட்டு அச்சிடுவதற்கான மை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
அந்த மை தற்போது தீர்ந்து விட்டது.
மை வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மை கைக்கு கிடைக்கவில்லை. ரூ. 200, ரூ. 500 நோட்டுகள் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டு இருக்கிறது.
தற்போதைய பணத்தட்டுப்பாட்டுக்கு இதுவும் ஒரு காரணம்’ என்றார். எப்போது முதல் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தப்பட்டது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
பல மாநிலங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 500 ரூபாய் நோட்டுகள் 5 மடங்கு அச்சிடுவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என மத்திய அரசு கூறியிருக்கும் நிலையில், நாசிக் அச்சக ஊழியர் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
.