பிரதமர் மோடி இன்று வெளிநாடு புறப்பட்டார்: லண்டன் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கிறார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரதமர் மோடி இன்று வெளிநாடு புறப்பட்டார்: லண்டன் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கிறார்

புதுடெல்லி: சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ‘நார்டிக்’ நாடுகள் என அழைக்கப்படும் ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே நாடுகளின் உச்சி மாநாடு நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. சுவீடன் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும், நார்டிக் நாடுகளின் பிரதமர்களும் பங்கேற்கின்றனர்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு வருகிற 18-ந் தேதி முதல் 20-ந் தேதி முடிய நடக்கிறது. இதில் பிரதமர் மோடி உள்பட 53 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த 2 மாநாடுகளிலும் பங்கேற்பதற்காக மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சுவீடன் புறப்பட்டு சென்றார். இன்று இரவு அவர் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் சென்றடைகிறார்.

நாளை சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வெனை மோடி சந்திக்கிறார்.

அவருடன இரு நாடுகளின் உறவு குறித்து ஆலோசனை நடத்துகிறார். இருதரப்பிலும் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சுவீடனில் வசிக்கும் 20 ஆயிரம் இந்திய சமூகத்தினருடன் அவர் கலந்துரையாடுகிறார். சுவீடன் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை இரவு மோடி அங்கிருந்து லண்டனுக்கு பயணமாகிறார்.

வருகிற 18-ந் தேதி காலை இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை சந்திக்கிறார். பிரிவினைவாதம், எல்லைதாண்டிய பயங்கரவாதம், விசா மற்றும் குடியேற்றம் தொடர்பாக அவர்கள் விவாதிக்கின்றனர்.

அப்போது இரு நாடுகளுக்கும் இடையே 10-க்கும் மேற்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதையடுத்து, லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்துக்கு சென்று அங்கு நடைபெறும் அறிவியல் கண்காட்சியை மோடி பார்வையிடுகிறார். லண்டனில் வசிக்கும் இந்திய சமூகத்தினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

லண்டன் தேம்ஸ் நதிக்கரையோரம் நிறுவப்பட்டு உள்ள 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய தத்துவஞானி மற்றும் சமூக சீர்திருத்தவாதி பசவேஸ்வரா சிலைக்கு மரியாதை செய்கிறார். அன்று மாலை பக்கிங்ஹாம் அரண்மனையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தையும் மோடி சந்தித்து பேசுகிறார்.

காமன்வெல்த் தலைவர்களில், 91 வயது ராணி எலிசபெத் தனிப்பட்ட முறையில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ள மூன்று பிரதமர்களில் மோடியும் ஒருவர் ஆவார்.

19 மற்றும் 20-ந் தேதியும் காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாட்டின் முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் வர்த்தகம், மேம்பாடு, கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்பம் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

மாநாட்டில் 5 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 20-ந் தேதி மாநாடு வின்சர் காஸ்டில் அரண்மனையில் நடக்கிறது.

இதன் முக்கிய நிகழ்வாக காமன்வெல்த் தலைவர்கள் சாதாரண முறையில் சந்தித்து பேசுகிறார்கள். இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு 20-ந் தேதி மோடி ஜெர்மனி நாட்டுக்கு செல்கிறார்.

அங்கு 4-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ஏஞ்சலா மெர்கலை சந்தித்து பேசுகிறார்.

பின்னர் மோடி 21-ந் தேதி நாடு திரும்புகிறார்.

.

மூலக்கதை