காவிரி மேலாண்மை வாரியம் குறித்து விவாதிக்க கர்நாடக எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம்!!!

PARIS TAMIL  PARIS TAMIL
காவிரி மேலாண்மை வாரியம் குறித்து விவாதிக்க கர்நாடக எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம்!!!

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து கர்நாடக எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் இன்று (வியாழக்கிழமை) பெங்களூருவில் நடக்கிறது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி 16-ந் தேதி இறுதி தீர்ப்பு கூறியது. அதில் கர்நாடகத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீரை ஒதுக்கீடு செய்தது.

அதே நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வாரியம் அமைந்தால் காவிரி அணைகளை கட்டுப்படுத்தும் உரிமை கர்நாடக அரசுக்கு இருக்காது. இதனால் காவிரி மேலாண்மை வாரியத்தை எக்காரணம் கொண்டும் அமைக்கக்கூடாது என்று கர்நாடக அரசு மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீர வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. அங்குள்ள அரசியல் கட்சிகளும் இதை வற்புறுத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசும் சட்டசபையில் இதுகுறித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் பற்றி விவாதிக்க கர்நாடக எம்.பி.க்கள் ஆலோசனை டெல்லியில் கடந்த 16-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த கூட்டம் கடைசி நேரத்தில் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. மேலும் ரத்து செய்யப்பட்ட இந்த கூட்டம் வருகிற 22-ந்தேதி (அதாவது இன்று) நடைபெறும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்து இருந்தார்.

அதன்படி பெங்களூருவில் உள்ள விதானசவுதாவில் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தேவேகவுடா, எடியூரப்பா உள்பட அனைத்துக்கட்சிகளின் எம்.பி.க்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. அத்துடன் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என்று இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை