'பாக்.,கில் பயங்கரவாதம் தழைப்பது நிரூபணம்': இந்தியா குற்றச்சாட்டு
புதுடில்லி: 'ஜம்மு - காஷ்மீர் பிரச்னை குறித்து பாகிஸ்தான் பயங்கரவாதி, ஹபீஸ் சயீது பேசியுள்ளதன் மூலம், பாகிஸ்தானில் பயங்கரவாதம் தழைத்து வருவது நிரூபிக்கப்பட்டு உள்ளது' என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
மும்பையில், 2008ல் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவன், ஹபீஸ் சயீதை, அந்த நாட்டு நீதிமன்றம் விடுவித்தது. சிறையில் இருந்து வெளியே வந்த அவன், 'காஷ்மீர் மக்கள் விடுதலை பெறுவதற்கு, பாகிஸ்தானில் ஆதரவு திரட்டி வருகிறேன்' என, கூறியுள்ளான்.
இது குறித்து, மத்திய வெளியுறவுத் துறை உயரதிகாரி கூறியதாவது: ஜம்மு - காஷ்மீர், எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும். ஹபீஸ் சயீதின் பேச்சு, பாகிஸ்தானில் பயங்கரவாதம் தழைத்து கொண்டிருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இதுபோன்ற பேச்சுகளுக்கு, நம் வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இவ்வாறு கூறினார்.