தமிழக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: தினகரன் ஆவேசம்

தினமலர்  தினமலர்
தமிழக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: தினகரன் ஆவேசம்

சென்னை : 'மக்கள் வாழ்வு குறித்து, கவலை கொள்ளாமல் இருக்கும் தமிழக அரசுக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டுவர்' என, தினகரன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம், பொறையாரில், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை மேற்கூரை இடிந்து விழுந்ததில், எட்டு பேர் இறந்துள்ளனர். அரசு நிர்வாகத்தின் கண்காணிப்பு, முற்றிலும் இல்லாத நிலையை, இந்த விபத்தும், உயிர் பலியும் எடுத்துக்காட்டுகிறது.

மார்ச் மாதம், தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், என்னை சந்தித்தார். அப்போது, 'போக்குவரத்து துறைக்கு, போதிய நிதியை, முதல்வர் ஒதுக்கவில்லை. முதல்வர் மற்றும் அவரை சார்ந்த, ஒரு சில அமைச்சர்களின் துறைக்கு மட்டும், போதிய நிதி ஒதுக்கப்படுகிறது' என குறைபட்டார். அவர் கூறிய குறை, தற்போது வரை நிவர்த்தி செய்யப்படவில்லை என்பது தெரிய வருகிறது.

ஆட்சி என்பது, பதவியில் அமர்ந்திருப்பது மட்டும் தான் என்ற எண்ணத்தோடு, ஆட்சி நடத்தும் மக்கள் நலன் மறந்த ஆட்சியாளர்களுக்கு, கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் வாழ்வு குறித்து, கவலை கொள்ளாமல் இருக்கும், இந்த அரசுக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டுவர். இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.

மூலக்கதை