கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் வீட்டில் ரெய்டு
பெங்களூரு : கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ். எம். கிருஷ்ணாவின் மருமகன் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ். எம். கிருஷ்ணா.
இவரது மருமகன் சித்தார்த்தா. பிரபல காபி நிறுவனத்தின் உரிமையாளரான இவரது வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
பெங்களூரில் உள்ள வீடு, அலுவலகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. இதுமட்டுமின்றி சிக்மகளூர், மும்பை, சென்னை ஆகிய இடங்களில், சித்தார்த்தாவுக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. வரி ஏய்ப்பு தொடர்பாக இந்த சோதனைகளை நடத்தியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களுள் ஒருவராக விளங்கியவர் எஸ். எம். கிருஷ்ணா.
முதல்வர், கவர்னர், மத்திய அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்த கிருஷ்ணா, இந்தாண்டு தொடக்கத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் குதிரை பேரத்தை தடுக்க காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கர்நாடகாவில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இதற்கு உதவியதாக கூறப்பட்ட கர்நாடக அமைச்சர் சிவக்குமாரின் வீடுகளில் சோதனை நடத்தியது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.