சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் விஜய் மல்லையாவின் ₹100 கோடி பங்குகள் மத்திய அரசுக்கு மாற்றம்
மும்பை : சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன தலைவர் விஜய் மல்லையாவின் ரூ. 100 கோடி பங்குகள் மத்திய அரசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விஜய் மல்லையா நடத்தி வந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் திவாலானது. இதற்காக அவர் பல்வேறு வங்கிகளில் வாங்கிய சுமார் ரூ.
6 ஆயிரம் கோடி கடனை நிறுவனத்தின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தாமல் வெளிநாடுகளில் சொத்து வாங்க பயன்படுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. வங்கிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து அவர் லண்டன் தப்பினார்.
அவரை கைது செய்து ஆஜர் படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவரை நாடு கடத்த இங்கிலாந்து அரசு மறுத்து விட்டது.
இதை தொடர்ந்து அந்நாட்டின் நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக லண்டன் கோர்ட்டில் அண்மையில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் இந்தியாவில் அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன. வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்களை ஏலம் விடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அடமானம் வைக்கப்படாத சில சொத்துகளையும் அமலாக்கத்துறை முடக்கியது. இதில் யுனைடெட் ப்ருவரிஸ் நிறுவனத்தில் விஜய்மல்லையாவுக்கு சொந்தமான ரூ.
100 கோடி மதிப்பிலான பங்குகளும் அடங்கும். சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் படி விசாரணைக்கு ஒருவர் தொடர்ந்து ஆஜராக மறுத்தால் முடக்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.
இதன் படி விஜய்மல்லையாவின் ரூ. 100 கோடி பங்குகள் மத்திய அரசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.