மனு கொடுக்க ஆளில்லை : அமைச்சர்கள் ஏமாற்றம்

தினமலர்  தினமலர்
மனு கொடுக்க ஆளில்லை : அமைச்சர்கள் ஏமாற்றம்

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு, தொண்டர்கள் வராததால், மனு வாங்க வரும் அமைச்சர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். முதல்வர் பழனிசாமி உத்தரவுப்படி, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், தினமும் ஐந்து அமைச்சர்கள், தொண்டர்களிடம் மனுக்கள் பெறுகின்றனர்.

நேற்று முன்தினம், அமைச்சர்கள் சீனிவாசன், ராதாகிருஷ்ணன், வளர்மதி, ராஜேந்திர பாலாஜி, மணிகண்டன் ஆகியோர், கட்சி அலுவலகம் வந்தனர். ஆனால், கட்சி தொண்டர்கள் யாரும் வரவில்லை; இரண்டு மணி நேரம் காத்திருந்தும், மூன்று மனுக்கள் மட்டுமே பெறப்பட்டன.
இந்நிலையில், நேற்று துரைக்கண்ணு, ராஜலட்சுமி, ராஜு உள்ளிட்ட ஐந்து அமைச்சர்களும், துணை சபாநாயகர் ஜெயராமனும் கட்சி அலுவலகம் வந்தனர். நேற்றும் தொண்டர்கள் யாரும் வரவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான நபர்கள் மட்டுமே மனு அளித்தனர். பல மணி நேரம் காத்திருந்தும், கட்சி தொண்டர்கள் வராதது, அமைச்சர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

- நமது நிருபர் -

மூலக்கதை